படமாடக் கோயில் ... - திருமூலர்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் :

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".
        -------- திருமூலர்.

முதற் குறிப்பு :-
திருமூலர் காலத்தில் கோயிலில்  சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த இறைவனின்  ஓவியங்கள் (படங்கள்) வழிபடப்பட்ட நிலையும் இருந்தது.

பாடற் பொருள் :-
படமாடுங் கோயிலில் உறையும் இறைவர்க்கு (பகவற்கு) ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு (நம்பர்க்கு) - வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதர்க்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும்.

பின் விளக்கம் :-
இதன் மூலம் திருமூலர் இறை மறுப்பைப் போதிக்கவில்லை (அவர் சிவத்தில்  உருகியவர்). புற வழிபாட்டை விட அக வழிபாடே இறைவனைச் சென்றடையும் என வலியுறுத்துகிறார்.
" நலிவுற்ற எம் சகோதர சகோதரிகளுள்  ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எமக்கே செய்தீர்கள்" - (மத்தேயு 25:40) எனக் கிறித்துவத்திலும், "தம் பொருளை இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக பந்துக்களுக்கும்,  அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வோரே நன்னெறியாளர்கள், முத்தஹீன்கள் (இறை விசுவாசிகள்)" (திருக்குர் ஆன் 2:177) என்று இஸ்லாத்திலும் உள்ளவை இங்கு உணரத் தக்கவை.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி