உண்டால் அம்ம இவ்வுலகம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல்
                         - சுப.சோமசுந்தரம்

"உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்  அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,  உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !"
       ----புறநானூறு 182.
(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது)

பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார்.

பாடற்பொருள் :-
" இவ்வுலகம்  உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்)  எனத் தொடங்குகிறது பாடல்.  இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார். அவையாவன : இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்;  பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம்                             மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி, வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே  முயலும் தன்மையர்.
இத் தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.

பின்குறிப்பு:-
'தன் பெண்டு தன் பிள்ளை' என்று மட்டும் வாழாமல், பிறர்க்கெனவும் வாழ்பவரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பதுவே இப்பாடலில் சான்றோர் உலகத்துப் பேசுபொருள். அஃதாவது பொதுவுடைமைவாதிகளாலேயே இவ்வுலகம் இயங்குகிறது எனக் கொள்ளலாம் (மக்களுக்காக நிற்கும் எவரும் பொதுவுடைமைவாதி என்பதே அதற்கான  வரையறை). ஒரு கூட்டத்தில் இப்பாடலைப்  பின்வருமாறு குறித்த  நினைவு வருகிறது: மன்னரையும், நிலவுடமையாளரையும், முதலாளி வர்க்கத்தையும் பொதுவாக 'பூஷ்வா' (Bourgeoisie)  எனக் குறிப்பிடுவோம். அப்படி நாம் அழைக்கும் பூஷ்வாவான பாண்டியன் இளம்பெருவழுதிதான் முதல் மானிட பொதுவுடமைவாதியோ!

Comments

  1. தமிழில் சுவை உணர்த்தும் தங்கள் பணி சிறக்கப் பாராட்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

படமாடக் கோயில் ... - திருமூலர்