Posts

கண்டனென் கற்பினுக்கு அணியை

 கண்டனென் கற்பினுக்கு அணியை                பொதுவாக ஒரு அலுவல் மேற்கொண்டு முயற்சி செய்தவர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ திரும்பி வந்து நம்மிடம் அச்செயல் நிகழ்வு பற்றிக் கூறத் தொடங்குகையில், "சென்ற காரியம் காயா பழமா என்று முதலில் சொல்" என்று அவரிடம் கேட்பது இயல்பான ஒன்று. அவரே முடிவினை அறிவித்துவிட்டு நிகழ்வு பற்றி நீட்டி முழக்குவது சிறப்பு. அதைத்தான் கம்பனின் அனுமன் செய்கிறான். அன்றைய உபந்நியாசகர்கள் முதல் இன்றைய சொற்பொழிவாளர்கள் வரை இலங்கை சென்று மீண்ட அனுமன் ராமனிடம், "கண்டேன் சீதையை" (கண்டனன் கற்பினுக்கு அணியை) என்று ஆரம்பித்த விதத்தை அழுத்தமாகத் சொல்லத் தவறுவதில்லை. அதிலும் " 'சீதையைக் கண்டேன்' என்றில்லாமல் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி ராமனை முதலில் ஆறுதல் படுத்தினான் அனுமன்" என்றும் சிலாகிப்பர். "கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண்டிரை அலை கடல் இலங்கைத் தென்னகர் அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும் பண்டுள துயரும் என்றனுமன் பன்னுவான்" பொருள் : கற்பினுக்கு அணியினை (சீதையை) என் கண்களால் கண்டேன் -  தெள்ளிய அலைகளை உடைய கடல் (தெண் த...

அழகியல் ஓர் உயரியல்

 பாலகாண்டத்தில் கோசல நாட்டின் மருத நில வருணனையில் நம்மைக் கிறங்க அடிக்கிறான் கம்பன் : "தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ" பொருள் : குளிர்ச்சி பொருந்திய நிலத்தில் (தண்டலை - தண் தலை) - அஃதாவது சோலையில் - மயில்கள் ஆடுகையில், தாமரையாகிய விளக்குகள் ஒளிர்ந்து நிற்க, மேகங்கள் (கொண்டல்கள்) முரசொலிக்க (முழவின் ஏங்க), குவளையாகிய கண்கள் விழித்து நோக்க, தெள்ளிய நீரலைகள் (தெண்டிரை - தெண் திரை) திரைச் சீலையாய்த் திகழ (எழினி காட்ட), தேனைப் பிழிந்தெடுத்த (தேம் பிழி) இனிமை(சுவை)யொத்த மகர யாழின் இசை போன்று வண்டுகள் இனிமையாய்ப் பாட, மருத நிலமகள் வீற்றிருக்கின்றாள்.               கம்பனின் மேற்கூறிய இயற்கை வருணனை சீவக சிந்தாமணியின் கேமசரியார் இலம்பகத்தில் 1417 ஆம் பாடலை நினைவுறுத்துகிறது : "சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா வனையலாகா உருவ நோக்கி மைந்தற் கிரங்கி இனைவ போலும் வரையின் அருவி ......

அறிமடமும் சான்றோர்க்கு அணி

 "முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும்  சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப  அறிமடமும் சான்றோர்க்கு அணி"                       பழமொழி நானூறு; பாடல் 361. பாடியவர் : முன்றுறை அரையனார் பொருள் : முல்லைக்குத் தேரை அளித்தமையும் (பாரி), மயிலுக்குப் போர்வை அளித்தமையும் (பேகன்) முற்காலத்தில் (தொல்லை - தொன்மை, முற்காலத்தில்) அறிவோம். செறிவான மடல்களுடன் பூத்திருக்கும் தாழைச் செடிகள் சூழ்ந்த கடற்கரைத் தலைவனே ! (புலவர் தாம் பாடும் அரசனை உரிய முறையில் விளிக்கிறார்). அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதலும்  (சில தருணங்களில்) சான்றோர்க்கு அணி (சிறப்பு) சேர்ப்பதாகும்.

வேவத் திரிபுரம் செற்ற வில்லி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் :            நேற்றைய பாடலில் நாவுக்கரசர் திருவையாறு பதிகத்தில் சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு  சமநிலை பாராட்டியதைக் கண்டோம். அதே போன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தின் திருவார்த்தை பதிகத்தில் பன்றியைப் பேணுதல் காணலாம். "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய;  செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய;  எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி -  திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்;  தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல;  எம்பிரான் தான் வேடுவனாய் -  என் பிரானாகிய சிவன் தான் வேடனாக;  கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர;  இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்;...

மாதர்ப் பிறைக் கண்ணியானை

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்"          (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1) பொருள் விளக்கம் : மாதர்பிறை - அழகிய பிறையினை;  கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை; மலையான் மகளொடும் பாடி -  மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி; போதொடு - மலர்களோடு;  நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி; புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்; யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது -  திருவையாறு அடைகின்றபோது; காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு; களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்;  கண்டேன் அவர் திருப்பாதம் -  அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்;...

கேள்விக்கு இனியை கட்கின்னாயே !

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் : வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில்  பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, நமது சென்ற பதிவில் ("பாரி பாரி என்று பல ஏத்தி ......") கபிலர் பாரி வள்ளலை இகழ்வது போலப் புகழக் கண்டோம். இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே அமர்காணின் அமர்கடந்து அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு கேள்விக்கு இனியை கட்கின் னாயே ! அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின் ஊறுஅறியா மெய் யாக்கை யொடு கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே! அதனால் நீயும் ஒன்று இனியை அவரும்ஒன்று இனியர் ஒவ்வா யாவுள மற்றே ? வெல்போர்க் கழல்புனை திர...

ஈன்ற ஞான்றினும் பெரிதே

 புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் மகன் தான் களத்தில் விழுவதற்கு முன் களிற்றியானை (ஆண்யானை) ஒன்றை வேல் எறிந்து வீழ்த்தினான் என்று அறிந்து அவனை ஈன்ற பொழுதை விடப் பெரிதும் உவந்தாள். அது வீரம் பற்றிய புறநானூற்று பாடல் ஒன்றின் முதற்பகுதி. அத்தோடு முடிந்தால், "அவள் ஒரு வீரத்தாய் மட்டும்தானா ? தாய் இல்லையா ? மகனை இழந்த செய்தி கேட்டதும் தனது உலகமே இருண்டது போன்ற இயற்கை உணர்வெல்லாம் ஒரு வீரப் பெண்மணிக்கு ஏற்படாதா ? வீரம் என்பது உணர்வற்ற வறட்டுத்தனம்தானா ?" என்ற கேள்விகள் எழ வாய்ப்பு உண்டு. இக்கேள்விகளுக்கு விடையைப் பாடலில் பிற்பகுதி தருகிறது. மூங்கிலின் உட்தங்கிய மழைநீரானது காற்றில் மூங்கில் அசையும் போது வடியும் அல்லது சிதறுமே, அதைவிடப் பல மடங்கு அவளது கண்கள் நீரை வெளிப்படுத்தின. "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"                               (புறநானூறு 277) ப...