Posts

Showing posts from April, 2025

இலக்கியத்தின் உறுபொருள்

                இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது.            மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்" என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன். பாடற் பொருள் : விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்.             இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத...

உள்ளம் பெருங்கோயில்

 ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருத்தலைப் பேசிய உரையில் "சீவனே சிவன்" எனக் குறிக்கப்பெற்றது. இந்த சொற்பயன்பாடும் திருமந்திரத்திலிருந்தே எடுக்கப்பட்டது. அதுவே நமது இன்றைய தமிழ்ப் பாடலாய் அமையட்டுமே ! *தினம் ஒரு தமிழ்ப் பாடல்* : "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் *சீவனே சிவலிங்கம்* கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே"         (திருமந்திரம் 1823). பாடல் விளக்கம் : அழிந்து போகும் மனித உடலை உருவகமாக்கி அழியாப் பரம்பொருளைக் காணும் உருவக அணியே இப்பாடல். ஊனுக்குள் ஒளிந்திருக்கும் ஈசனை மேலும் வெளிக் கொணர முயல்வது. பாடற் பொருள் : நம் உள்ளமே கருவறை (பெருங்கோயில்). ஊனுள்ள இந்த உடம்பே கோயில். நம் வள்ளல் பெருமானுக்கு (இறைவனுக்கு - திருமூலரைப் பொருத்தமட்டில் சிவபெருமானுக்கு) கோபுர வாசல் என்பது (அவனைப் பாடிப் போற்றும்) நமது வாய் ஆகும். தெளிவான சிந்தனையுடயோர்க்கு அன்னார்தம் சீவனே (உயிரே) சிவலிங்கம். (நம்மை மயக்கும்) கள்ளப் புலன்கள் ஐந்தும் நம் இருளைப் போக்கும் (காளா) மணிவிளக்குகள் ஆவன; அஃதாவது சில சூழ்நிலைகளில் நம்மை அவை மதிம...

உடம்பின் மேன்மை - திருமந்திரம்

 *இன்று இரு தமிழ்ப் பாடல்கள்* "காயமே இது பொய்யடா  காற்றடைத்த பையடா" என்று சித்தர் பாடல் உடலின் நிலையாமை குறித்துப் பாடினாலும், மானிடத்திற்காக உயிர் இயங்கும் வரை உடலைப் பேணுதலின் இன்றியமையாமையை உணர்ந்து சித்தர்கள் மருத்துவம் பல சொன்னார்கள். திருமந்திரப் பாடல்களில் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருத்தலும், ஊனுடம்பு ஆலயம் என்பதும் அழியும் இந்த உடம்பின் மேன்மை பகர்வன. திருமூலர் உடம்பினை ஓம்புதலின் (பேணுதலின்) சிறப்பைக் கூறும் மேலும் இரண்டு பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன. பாடல்களின் சொற்சுவை, எளிமை கருதி தனியாக உரை தேவையில்லை என்பது அடியேன் கருத்து. ஒவ்வொரு பாடலும் அதுவே அதற்கான சிறந்த உரை : (1) "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"           (திருமந்திரம் 724) (2) "உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"          (திருமந்திரம் 725)

குகனொடும் ஐவரானோம்

 தினம் ஒரு தமிழ்ப் பாடல்  என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில் “குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம் புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை"       என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான் மகன்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை (நுந்தை)" என்கிறான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன்  தன் தந்தையை 'உன...