திராவிடம் - பேரா.த.செயராமன்

           திராவிடம்

                   - பேரா.த.செயராமன்


மனோன்மணியம் சுந்தரனார் மிகச் சிறந்த தமிழறிஞர்; முன்னோடியான மெய்யியலாளர். மொழியியல் அறிவும், மாந்தவியல் அறிவும், வரலாற்று அறிவும், கல்வெட்டியல் அறிவும், ஆராய்ச்சியும், இவை குறித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பும் உள்ள, அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட பேரறிஞர். மறைமலை அடிகள் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்வதற்கு பரிந்துரையும் வழங்கியவர் சுந்தரனார் தான். 


 தமிழ் இலக்கியங்களில் உள்ள "தமிழ்நாடு " குறித்த பதிவுகள் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் மனோன்மணியம் நாடகத்தில் எழுதியுள்ள தமிழணங்கு வாழ்த்தில் "திராவிட நல் திருநாடு" என்று ஏன் குறிப்பிட்டு இருக்கிறார்?  அவர் என்ன பொருளில் குறிப்பிடுகிறார் என்பதே அறியாமல் சிலர் விமர்சிக்கிறார்கள். 


1890 's என்பது திராவிட இன உணர்வு  மிகுந்தவளர்ச்சி பெற்ற காலகட்டம். 1892 -இல் இப்பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எழுதுகிறார். 1890-இல், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபாவை உருவாக்குகிறார்.

1892-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் கூடியுள்ள கூட்டத்தில், சென்னை மகாஜன சபை பிரதிகளுடன் "சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் ஒரு பிரதிநிதியாய் " அமர்ந்திருந்ததாகப் பதிவு செய்கிறார். 1885 - இல் திராவிட பாண்டியன் இதழ் வந்தது. தென்னிந்திய மக்கள் ஆரியர் அல்லாதவர்கள் என்றும், தென்னிந்திய மொழிகள் ஆரியத்திலருந்து பிறக்கவில்லை என்றும், அறிஞர் பெருமக்கள் புரிந்து கொண்ட காலகட்டம் அது. ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அடித்து நொறுக்கும் நோக்கத்தில் அறிஞர்கள்  பங்களிப்பு செய்து கொண்டிருந்த காலம் அது. தங்களுடைய போர்க் கருவியாக "திராவிட" என்ற சொல்லை கைக்கொண்டு சமூக விடுதலைக் கருத்தியல் புரட்சியில் ஈடுபட்டார்கள். இதற்கு பேராசிரியர் சுந்தரனாரும் விதிவிலக்கல்ல.


 மனோன்மணியம் சுந்தரனாரிடம் மிகுந்து காணப்பட்ட உணர்வு ஆரிய எதிர்ப்பு. விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கி இருந்தபோது அவரும் சுந்தரனாரும் சந்தித்து பலமுறை பேசிக்கொண்டார்கள். இந்நிலையில் சுந்தரனாரின் விருந்தினராக அவருடைய வீட்டில் விவேகானந்தர் உணவு அருந்தினார். விவேகானந்தர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் கண்ட குறைபாடு அவர் இன உணர்வு உள்ளவராக இருக்கிறார் என்பதுதான்.  தம்மை திராவிட இனத்தவராக அவர் கருதுகிறார் என்பதுதான் அவர் மீது உள்ள குறையாக விவேகானந்தர் கண்டார்.


தான் ஹிந்து அல்ல என்றும், திராவிடன் என்றும் விவேகானந்தரிடம் பேராசிரியர் ஆணித்தரமாக கூறியதை K.சுந்தர்ராம ஐயர் அவர்கள் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். Reminiscences of Swami Vivekananda எனும் இன்னொரு நூலிலிருந்து :


One remark of Professor Sundaram Pillai — that, as a Dravidian, he considered himself entirely outside the Hindu polity — put him somewhat out of court with the Swami, who, later on, remarked of him that eminent as he was as a scholar, he had thoughtlessly given himself away to the sway of race prejudice, which already during his travels the Swami had noted as an unpleasant characteristic of certain South Indian minds of the unbalanced or mediocre type.


-“Reminiscences of Swami Vivekananda” -3rd edition 1983


 அதுமட்டுமின்றி, சுந்தரனாரின் வீட்டில் உணவருந்திய அன்று பேசிக் கொண்டிருக்கும் போது, உங்களுடைய கோத்திரம் என்ன என்று பேராசிரியர் சுந்தரனாரிடம் விவேகானந்தர் கேட்டவுடன் அவர் ஆத்திரம் கொண்டார். ஆனால் விருந்தினரிடம் அதைக் காட்டுவது பண்பாகாது என்று அடக்கிக் கொண்டார், இதை அவரே தம் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார். பல நூல்களிலும் இக்கருத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.


தன் குறிப்புப் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்:


"உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.”


தமிழணங்கைப் போற்றி பாடுகின்ற சுந்தரனார் - 'தமிழ நல் திருநாடு' என்று கூட பாடி இருக்கலாம். அந்த சொல் அவருக்குத் தெரியாததல்ல. கடந்த காலத்தில் தமிழ்நாடு என்று இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதை நன்றாக அவர் அறிவார். ஆனால் ஆரியத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, வருணத்தையும், கோத்திரத்தையும் எதிர்த்து நிற்கும் ஒரு போக்கு அப்போது முகிழ்த்திருந்த நிலையில், அந்த உணர்வோடு "ஆரியத்தை மறுக்கும் நிலப்பரப்பு " என்ற பொருளில், "ஆரியர் அல்லாத இனத்தவர் வாழும் நிலப்பரப்பு " என்னும் பொருளில், "திராவிட நல் திருநாடு" என்று அவர் குறிப்பிடுகிறார்.


 இதுதான் விவேகானந்தருக்கும் கசப்பை தந்தது. பார்ப்பனிய உணர்வாளர்களுக்கும் கசப்பைத் தந்தது. இப்போதும் அந்த சொல் ஆரிய, பார்ப்பனிய, வர்ணாசிரம ஆதரவாளர்களுக்கும் கசப்பைத் தருகிறது.


 இவை வரலாற்றுச் சுவடுகள். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலுடன்  தமிழினத்தின் விழிப்பு தொடங்கியது. ஆகவேதான் சுந்தரனாரை இதுவரை அத்தனை அறிஞர் பெருமக்களும், தமிழ்ப் புலவர்களும் போற்றி புகழ்ந்து இருக்கிறார்கள்.


 இப்போது "திராவிட " என்ற ஒற்றைச் சொல் தங்கள் அரசியலுக்கு ஏற்க முடியாத ஒன்று என்பதற்காக, சுந்தரனாரின் பாடலில் கை வைக்க முற்படுவது என்பது அறிவுடைய செயல் அல்ல. ஒரு பாடலை அல்லது ஓர் இலக்கியத்தை நாம் படிக்கும் போது, அது எழுந்த காலம் மற்றும்அதன் வரலாற்றுப் போக்கோடு பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். 


அடிப்படையாக எதையும் அறிந்து கொள்ளாமல், தங்களை தமிழ் உணர்வாளர்களாகவும், தமிழினத்தை காக்க வந்தவர்களாகவும் காட்டிக்கொள்ள, உளறிக் கொட்டுவது, ஒருபுறம் நகைப்பாக இருந்தாலும், மற்றொருபுறம் ஆரியத்தின் அடியாட்களாக களம் இறங்கி இவர்கள் செய்யும் செயல்கள் கடந்த காலத்தில் ஈட்டிய சமூக விடுதலையை நொறுக்கிவிடக் கூடாதே என்ற கவலையும் எழுகிறது.


தமிழ்மொழி வாழ்த்தை இப்போதும் கூட பலர் எழுதலாம். இதற்கு முன்பும் கூட பலர் எழுதி இருக்கிறார்கள். யார் தான் வாழ்த்துப்பா எழுத மாட்டார்கள்?  ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரலாற்றை வடிவமைத்திருக்கிறது; வரலாற்றை பதிவு செய்திருக்கிறது. அவருடைய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிஞர்கள் குழு தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அந்த பாடலோடு இணைந்து இருக்கக்கூடிய வரலாற்றுப் பின்புலமும், வரலாற்றுப் பங்களிப்பும் ஆகும். இப்பாடலை திறனாய்வு செய்த அறிஞர்கள் அவருடைய பன்முக அறிவாற்றல் எந்தெந்த வரிகளில் எப்படி வெளிப்படுகிறது என்பதையெல்லாம் பதிவு செய்துள்ளார்கள்.


கடந்த காலத்தில், எந்தெந்த காலங்களில் எந்தெந்த கருத்துகளையும், சொற்களையும் கைக்கொண்டு, இயக்கமாக்கி, இத்தமிழினம் போராடி வந்திருக்கிறது என்பதை அறிந்தவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் கை வைக்கத் துணிய மாட்டார்கள்.


- பேராசிரியர் த. செயராமன்

 தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்

19.10.2024.🤝💐❤️✊

https://www.facebook.com/share/p/17iYn9oWpd/

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்